சென்னை விமான நிலையத்தின் 2-வது கட்ட விரிவாக்கப் பணிகள் வேகமெடுக்கும்
சென்னை விமான நிலையத்தில் நடைபெற்று வரும் விரிவாக்கத் திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், முதல் கட்டப் பணிகள் 2023-ஆம் ஆண்டில் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஆண்டுக்கு 2.3 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்ட புதிய முனையம் பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது இரண்டாவது கட்டமாக, ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகளை சேவையளிக்கக்கூடிய உள்கட்டமைப்பை உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் முரளிதர மகாலி, கடந்த ஐந்து ஆண்டுகளில் சென்னை விமான நிலையத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.236.75 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.மேலும், 2022-23 நிதியாண்டு முதல் பயணிகள் போக்குவரத்து அடிப்படையில் சென்னை விமான நிலையம் நாட்டின் ஐந்தாவது மிகப் பரபரப்பான விமான நிலையமாக தொடர்ந்து இருந்து வருவதாகவும், விமானங்களுக்கான நேர ஒதுக்கீட்டில் எந்தவித பற்றாக்குறையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.இதனுடன், திருச்சி விமான நிலையத்தில் ரூ.80 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு (ATC) கோபுரப் பணிகள் 76 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், கோவை விமான நிலையத்தில் ரூ.51 கோடி செலவில் எல்லைச் சுவர் அமைக்கும் பணிகளும், ரூ.14 கோடி மதிப்பில் முனையக் கட்டிடத்தை மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.