சிவகாசி அருகே சட்டவிரோத பட்டாசு குடோனில் வெடிவிபத்து - 2 பேர் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகிலுள்ள செங்கமலப்பட்டி மற்றும் நாராயணபுரம் பகுதிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த தகரக் கொட்டகைகளில் பட்டாசு தயாரிப்பு நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென பட்டாசு குடோனில் சக்திவாய்ந்த வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த வெடிப்பால் பட்டாசுகள் பலத்த சத்தத்துடன் சிதறி வெடித்ததுடன், வானளாவிய கரும்புகை அப்பகுதியை சூழ்ந்தது. மேலும், விபத்தின் தாக்கம் காரணமாக சுமார் 5 கிலோமீட்டர் சுற்றளவில் அதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர்.
தகவல் கிடைத்தவுடன் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஒருவர் சுமார் 90 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையில், சிவகாசி அருகேயுள்ள பேர்நாயக்கன்பட்டியில் செயல்பட்டு வரும் ஜெய் விநாயகா கம்பி மத்தாப்பு பட்டாசு ஆலையிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக காகித அட்டைகளில் தீப்பற்றி இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.