தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் நேற்று மதியம் கும்பாரகுண்டி வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று வெளியே வந்தது. பின்னர் அது சாலையில் சுற்றித்திரிந்ததுடன், அந்த வழியாக வந்த வாகனங்களின் முன் நின்று செல்ல முடியாத சூழலை ஏற்படுத்தியது.இதையடுத்து திடீரென ஆவேசமான யானை, அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளை விரட்டியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இதனால் அச்சமடைந்த ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களை விட்டு விலகி பாதுகாப்பான இடங்களுக்கு ஓடிச் சென்றனர். அப்போது அங்கு நின்றிருந்த அரசு பேருந்தை நோக்கியும் யானை ஓடியதால், பேருந்தில் பயணம் செய்தவர்கள் பெரும் அச்சத்தில் உறைந்தனர்.
Advertisement
எனினும், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் சிறிது நேரம் சாலையில் சுற்றிய யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பிறகே பயணிகளும் வாகன ஓட்டிகளும் நிம்மதி அடைந்தனர். இதற்கிடையில், யானை அருகே செல்வது ஆபத்தானது என்பதை பொருட்படுத்தாமல் சிலர் அதன் அருகில் சென்று செல்போனில் வீடியோ பதிவு செய்தனர். மேலும், ஒரு பெண் யானைக்கு அருகில் சென்று புகைப்படமும் எடுத்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.