சபரிமலையின் புதிய தந்திரியாக பிரம்மதத்தன் நியமனம்
கேரளாவின் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலின் புதிய தந்திரியாக காந்தரரு பிரம்மதத்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சபரிமலை கோவிலின் முக்கிய பூஜைகள் மற்றும் தாந்திரீக சடங்குகள் பல தலைமுறைகளாக செங்கனூரைச் சேர்ந்த தாழமண் தந்திரி குடும்பத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கோவில் தொடர்பான முக்கியமான தாந்திரீக முடிவுகளும் இந்த குடும்பத்தினராலேயே எடுக்கப்படுவது வழக்கம்.திருவிதாங்கூர் தேவஸ்தானம் வாரியத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த நியமனம் தொடர்பான முடிவு எடுக்கப்பட்டதாக வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தற்போதைய தந்திரி காந்தரரு ராஜீவருக்குப் பிறகு, பிரம்மதத்தன் சபரிமலை அய்யப்பன் கோவிலின் தந்திரி (தலைமை அர்ச்சகர்) பொறுப்பை ஏற்க உள்ளார்.ஒவ்வொரு ஆண்டும் மலையாள நாட்காட்டியின் சிங்கம் மாதம் (தமிழில் ஆவணி) தொடங்கும் முதல் நாளில் தந்திரி பதவி மாற்றம் நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான சிங்கம் மாதம் ஆகஸ்டில் தொடங்குவதால், அன்றைய தினம் தாழமண் மடத்தைச் சேர்ந்த பிரம்மதத்தன் தாந்திரீக மரபுகளின்படி பொறுப்பேற்பார்.தற்போது சபரிமலை கோவிலின் மூத்த தந்திரியாக காந்தரரு ராஜீவரு உள்ளார். சில மாதங்களுக்கு முன்பு சபரிமலையில் நடந்த தங்கம் திருட்டு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் ஜாமீனில் உள்ளார்.இதற்கிடையில், உடல்நலக் காரணங்களால் சபரிமலையில் தமக்கு வழங்கப்பட்ட பணிகளில் இருந்து விடுவிக்குமாறு ராஜீவரு சமீபத்தில் தேவஸ்தானம் வாரியத்துக்கு கடிதம் அனுப்பியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், புதிய தந்திரி நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.