தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு சட்ட மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இதில் சில மசோதாக்களைத் தவிர, மற்றவற்றுக்கு கவர்னர் அர்லேகர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன்படி, தமிழ்நாடு ஊரமைப்பு சட்டத் திருத்த மசோதா, தீயணைப்புத் துறை சட்டத் திருத்த மசோதா, சம்பளம் வழங்கல் சட்டத் திருத்த மசோதா, ஊராட்சிகள் 2-ம் சட்டத் திருத்த மசோதா, தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (கூடுதல் பணி) சட்டத் திருத்த மசோதா, தமிழ்நாடு ஜி.எஸ்.டி. சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட 11 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
Advertisement
கவர்னரின் ஒப்புதலைத் தொடர்ந்து, இந்த 11 மசோதாக்களும் தற்போது சட்டங்களாகியுள்ளன. இவை அனைத்தும் கடந்த 15-ம் தேதியிட்ட தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கிடையே, தமிழகத்தில் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான தேவையான நிலப்பரப்பை குறைக்கும் வகையில் சட்டசபையில் அறிமுகம் செய்யப்பட்ட தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டம் தொடர்பான மசோதா, ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவதற்காக கவர்னரால் அனுப்பப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.