குதிரை பேர வழக்கில் முன்ஜாமீன்: காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட செந்தில் பாலாஜி
தவெக எம்.எல்.ஏ.வை பேரம் பேசி ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
இந்த உத்தரவின் படி, இருவரும் தலா ரூ.25 ஆயிரம் மதிப்பிலான சொந்த ஜாமீனையும், அதே தொகைக்கு இரு நபர்கள் ஜாமீனையும் வழங்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், அடுத்த கட்ட உத்தரவு வரும் வரை தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.இதற்கிடையில், போலீசார் தங்களை துன்புறுத்தாமல் இருக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனு விசாரணையின் போது, முன்ஜாமீன் வழங்கப்பட்ட பிறகும் இருவரும் இதுவரை சரணடையவில்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, சரணடையாமல் இருக்கும் நிலையில் போலீசார் துன்புறுத்தக் கூடாது என எவ்வாறு கோர முடியும் என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து, இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.இந்நிலையில், முன்ஜாமீன் உத்தரவின் அடிப்படையில் செந்தில் பாலாஜி நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி பிணைத்தொகையை செலுத்தினார். தொடர்ந்து, நீதிமன்றம் விதித்த நிபந்தனைக்கிணங்க இன்று சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். அவருடன் அவரது சகோதரர் அசோக் குமாரும் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.