காஞ்சிபுரம் அருகே பயங்கர விபத்து: லாரி மீது மோதிய தொழிற்சாலை பேருந்து; 25-க்கும் மேற்பட்டோர் காயம்
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில், தனியார் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கனரக லாரியின் பின்புறத்தில் மோதியது. இந்தச் சம்பவத்தில் பெண்கள் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகிலுள்ள சுங்குவார்சத்திரம் பகுதியில், செல்போன் சார்ஜர்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு, ஆரணியில் இருந்து தொழிற்சாலை பேருந்து இன்று அதிகாலை சுமார் 1 மணியளவில் புறப்பட்டது.சந்தவேலூர் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால், முன்னால் சென்றுகொண்டிருந்த கனரக லாரியின் பின்பகுதியில் பேருந்து பலத்துடன் மோதியது.இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது. பேருந்துக்குள் இருந்த தொழிலாளர்கள் உதவிக்காக கூச்சலிட்டனர்.
தகவலறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் சுங்குவார்சத்திரம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.காயமடைந்த அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஆரணியைச் சேர்ந்த 21 வயதான ரம்யா, முப்பதுவெட்டியைச் சேர்ந்த 35 வயதான சித்ரா மற்றும் நெமிலியைச் சேர்ந்த 23 வயதான கார்த்திகா ஆகியோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.லாரி ஓட்டுநர் மற்றும் லேசான காயமடைந்த 7 பேர் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளனர். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.பேருந்து ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் தூக்கக் கலக்கமே விபத்துக்கு முக்கியக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.