கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம்: ஜனாதிபதி மாளிகை நுழைவாயில் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டது
நீட் உள்ளிட்ட தேசியத் தேர்வுகளில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தப்படும் என அக்கட்சி முன்கூட்டியே அறிவித்திருந்தது.இதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு நாடாளுமன்றத்தைச் சுற்றிய பகுதிகளில் விரைவு அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டனர். பேரணியை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களால் ஐந்து மெட்ரோ நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக டெல்லி மெட்ரோ நிர்வாகம் அறிவித்தது.இதற்கிடையில், புதுடெல்லி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர். முன் அனுமதி வழங்கப்பட்ட ஜந்தர் மந்தர் பகுதியைத் தவிர, பிற இடங்களில் போராட்டம், பேரணி, ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும், ஐந்து பேருக்கு மேல் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.மேலும், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நாடாளுமன்றப் பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும், தடை உத்தரவை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டெல்லி காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.அதனை மீறியும், போராட்டக்காரர்களில் சிலர் நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேறினர்.
அவர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்றபோது, பாதுகாப்புப் படையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதன்போது தடியடி நடத்தப்பட்டதாகவும், பாதுகாப்பு காரணங்களால் நாடாளுமன்ற வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.வளாகத்திற்குள் நுழைய முயன்றவர்களை தடுக்க துணை ராணுவப் படையினர் துப்பாக்கிகளுடன் முன்னேறியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை நோக்கி செல்லக்கூடும் என்ற தகவலைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜனாதிபதி மாளிகையின் நுழைவாயில்கள் மூடப்பட்டன. இதற்கு முன், நாடாளுமன்ற நுழைவாயில்களும் சிறிது நேரம் மூடப்பட்டு பின்னர் மீண்டும் திறக்கப்பட்டன.