கன்னியாகுமரி: ஆசிரியர்களின் கண்டிப்பால் மனமுடைந்த நர்சிங் கல்லூரி மாணவி உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே செயல்பட்டு வரும் தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி ஒருவர், கல்லூரி நிர்வாகத்தின் நடவடிக்கையால் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலத்தின் நெய்யாற்றின்கரை அருகிலுள்ள கத்திப்பார பகுதியைச் சேர்ந்த 21 வயதான அன்சிஜி, கருங்கல் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.சில நாட்களுக்கு முன்பு அவர் கல்லூரிக்கு செல்போன் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கல்லூரி முதல்வர் ஷீஜா மற்றும் ஆசிரியர்கள், சக மாணவர்கள் முன்னிலையில் அவரைக் கண்டித்ததுடன், அவரது செல்போனையும் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த சம்பவத்தால் கடும் மனவேதனை அடைந்த அன்சிஜி, தனது தோழிகளுக்கு அனுப்பிய ஆடியோ பதிவில், கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து தன்னை மனரீதியாகப் பாதிப்பதாகக் கண்ணீருடன் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மதியம் கல்லூரி கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து அவர் குதித்தார்.
பலத்த காயமடைந்த அவரை சக மாணவிகள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.பின்னர், மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனளிக்காததால் நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாகக் கூறி, கல்லூரி முதல்வர் ஷீஜா மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.