கட்டிட அனுமதியில் கட்சி நிதி வசூலுக்கு தடை: புதிய வீடுகளின் விலை குறைய வாய்ப்பு
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) மற்றும் நகர ஊரமைப்பு இயக்ககம் (டி.டி.சி.பி.) மூலம் கட்டுமானத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் போது, சதுர அடிக்கு ரூ.27 முதல் ரூ.35 வரை "கட்சி நிதி" என்ற பெயரில் தொகை வசூலிக்கப்பட்டதாக நீண்டகாலமாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.கட்டிட அனுமதி தொடர்பான கோப்புகள் அதிகாரிகளிடம் இருந்தாலும், அவற்றின் விவரங்களை அறிந்த சில அரசியல் தொடர்புடையவர்கள் கட்டுமான நிறுவனங்களை அணுகி நிதி கோருவதாக கூறப்படுகிறது. இந்தக் கோரிக்கையை ஏற்காத நிறுவனங்களின் அனுமதி கோப்புகள் தாமதப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட கூடுதல் செலவை கட்டுமான நிறுவனங்கள் வீடுகளின் விலையில் சேர்த்ததால், வீட்டு விலையும் அதிகரித்ததாக கூறப்படுகிறது.இந்த சூழலில், கட்டிட அனுமதி வழங்கும் செயல்முறையில் கட்சி நிதி வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசின் இந்த நடவடிக்கையை இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (கிரெடாய்) மற்றும் இந்திய கட்டுமான வல்லுநர் சங்கத்தின் தென்னக மையம் வரவேற்றுள்ளன.இதுகுறித்து கட்டுமானத் துறையினர் கூறுகையில், கட்சி நிதி வசூல் நிறுத்தப்பட்டதால் நிறுவனங்களின் கூடுதல் செலவு குறைந்துள்ளதாக தெரிவித்தனர். அதன் பயனை வீடு வாங்கும் மக்களுக்கும் வழங்க வேண்டும் என்பதில் அனைவருக்கும் ஒருமித்த கருத்து இருப்பதாகவும், இனி அறிவிக்கப்படும் புதிய குடியிருப்பு திட்டங்களில் சதுர அடிக்கு ரூ.100 வரை வீட்டு விலையை குறைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.