ஒரு கட்சி தவிர... அசாம் வெள்ள நிவாரணத்திற்கு சம்பள தொகையை நன்கொடையாக அளிக்க எம்.எல்.ஏ.க்கள் முடிவு
அசாமில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ள பாதிப்பால் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவாக, ஒரு கட்சியைத் தவிர மற்ற அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும் தங்களின் ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளனர்.பருவமழை காரணமாக அசாமில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ள பாதிப்புகளில் சிக்கி இதுவரை சுமார் 70 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சூழலில், அசாம் சட்டப்பேரவையில் பேசிய சபாநாயகர் ரன்ஜீத் குமார் தாஸ், தாமும் துணை சபாநாயகர் ஹேப்பி தெரானும் தங்களின் ஒரு மாத சம்பளத்தை வெள்ள நிவாரண நிதிக்காக வழங்க உள்ளதாக அறிவித்தார். மேலும், சட்டப்பேரவைச் செயலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் ஒரு நாள் சம்பளத்தை நிவாரணம் மற்றும் புனரமைப்பு பணிகளுக்காக வழங்க சம்மதித்துள்ளதாகவும் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து, பா.ஜ.க.
மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதிக்காக வழங்க முன்வந்தனர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. வஜித் அலி சவுத்ரி பேசுகையில், கடந்த சில நாட்களாகவே கட்சி சார்பில் வெள்ள நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு மேலாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் தங்களின் ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்குவார்கள் என்றும் கூறினார்.அதேபோல், ஏ.ஐ.யூ.டி.எப்., ஏ.ஜி.பி. மற்றும் பி.பி.எப். கட்சிகளும் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால், ராய்ஜோர் தள் கட்சி இதுகுறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அக்கட்சியின் எம்.எல்.ஏ. மெஹ்பூப் முக்தார் அவையில் இருந்தபோதும், இதுதொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.அனைத்து கட்சிகளும் அளித்த ஒத்துழைப்பிற்கும் ஆதரவிற்கும் சபாநாயகர் ரன்ஜீத் குமார் தாஸ் அவையிலேயே நன்றி தெரிவித்தார்.