உயரும் விலை; ஆன்லைன் செயலிகளில் சர்க்கரை வாங்க வரம்பு நிர்ணயம்
விநாயகர் சதுர்த்தி பண்டிகை செப்டம்பர் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து அக்டோபர் 11-ம் தேதி நவராத்திரி பண்டிகையும் தொடங்குகிறது. அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ள நிலையில், சர்க்கரையின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஆன்லைன் வர்த்தக தளங்களில் சர்க்கரை வாங்குவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு வாடிக்கையாளர் ஆன்லைன் மூலம் அதிகபட்சமாக 2 கிலோ சர்க்கரை மட்டுமே வாங்க முடியும். ஆன்லைன் விற்பனைக்கு மட்டும் இந்த வரம்பு விதிக்கப்படவில்லை. நேரடியாக கடைகளில் நடைபெறும் சில்லரை விற்பனையிலும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.டி மார்ட், ரிலையன்ஸ் உள்ளிட்ட முன்னணி சில்லரை விற்பனை நிறுவனங்களில், ஒரு வாடிக்கையாளர் 2 முதல் 3 கிலோ வரை மட்டுமே சர்க்கரை வாங்க முடியும் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, சர்க்கரை விநியோகத்தை அதிகரிப்பதுடன், பதுக்கலைத் தடுக்கும் நோக்கிலும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, 10 லட்சம் டன் சுத்திகரிக்கப்படாத சர்க்கரையை சுங்க வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் சர்க்கரையை, இறக்குமதி செய்யப்பட்ட நாளில் இருந்து இரண்டு மாதங்களுக்குள் சுத்திகரித்து விற்பனை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.