இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயில்: 1,200 கி.மீ. பயணம் நிறைவு; 3,200 லிட்டர் டீசல் சேமிப்பு
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயில் சேவை தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 1,200 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை வெற்றிகரமாக கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயணத்தின் மூலம் சுமார் 3,200 லிட்டர் டீசல் பயன்படுத்த வேண்டிய அவசியம் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.கடந்த 17-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இந்த ஹைட்ரஜன் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார். அரியானா மாநிலத்தின் ஜிந்த் மற்றும் சோனிபட் இடையிலான வழித்தடத்தில் இந்த பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.இந்த ரெயில், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் இடையேயான வேதியியல் வினையால் உருவாகும் மின்சாரத்தை பயன்படுத்தி இயங்குகிறது. இதன் செயல்பாட்டில் வெளியேறும் ஒரே துணைபொருள் நீராவி மட்டுமே என்பதால் காற்று மாசுபாடு ஏற்படுவதில்லை. 'ஆத்மநிர்பார் பாரத்' திட்டத்தின் கீழ் இந்திய ரெயில்வேயால் முழுமையாக உள்நாட்டிலேயே இந்த தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
பசுமை போக்குவரத்துக்கான இந்தியாவின் முக்கிய முன்னேற்றமாக இந்த திட்டம் கருதப்படுகிறது.சேவை தொடங்கியதிலிருந்து இதுவரை 1,200 கிலோமீட்டருக்கும் மேல் பயணம் செய்துள்ள இந்த ஹைட்ரஜன் ரெயில், அதே தூரத்தை டீசல் என்ஜின் ரெயில் இயக்கியிருந்தால் தேவைப்பட்டிருக்கும் சுமார் 3,200 லிட்டர் டீசல் பயன்பாட்டை சேமித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், டீசல் எரிப்பால் ஏற்படும் புகை மற்றும் கார்பன் உமிழ்வும் முழுமையாக தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.ஜிந்த்–சோனிபட் வழித்தடத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக டெல்லி வழித்தடத்திலும் ஹைட்ரஜன் ரெயிலுக்கான சோதனை ஓட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2030-க்குள் இந்திய ரெயில்வேயை 'நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு' கொண்ட அமைப்பாக மாற்றும் இலக்கை அடைய ஹைட்ரஜன் ரெயில்கள் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.