இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்: முதல் அமைச்சர் விஜய் பதில் மனு
நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல், கரூர் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர், பெருந்துறை தொகுதி எம்எல்ஏ ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.இந்த ஐந்து தொகுதிகளின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அங்கு இடைத்தேர்தல் அறிவிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. தேர்தல் வழக்குகள் முடிவடைவதற்கு முன்பாக இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் அரசு நிதி செலவாகும் என்றும், ஒரே தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படும் அரசியல் சாசன சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.இதையடுத்து, திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. மேலும், இந்திய தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டப்பேரவை செயலாளர், முதல்வர் விஜய் உள்ளிட்ட எதிர்மனுதாரர்களும், எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா உள்ளிட்டோரும் மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது.இந்த நிலையில், முதல்வர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், ஐந்து தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எம்.எல்.ஏ.க்கள் இல்லாததால் சம்பந்தப்பட்ட தொகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, ஐந்து தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என முதல்வர் விஜய் தரப்பில் கோரப்பட்டுள்ளது. மேலும், இடைத்தேர்தல் நடத்தப்படக் கூடாது என்ற உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.இதனால், இடைத்தேர்தலுக்கு தடை கோரி வெங்கடாஜலபதி தாக்கல் செய்துள்ள பொது நல வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் முதல்வர் விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கோரப்பட்டுள்ளது.