ஆவினுக்கு பால் வழங்குவதை நிறுத்துவோம்: தமிழக விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை
பால் கொள்முதல் விலை உயர்வு தொடர்பாக தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பு, பால் உற்பத்தியை மட்டுமே நம்பி வாழும் லட்சக்கணக்கான உற்பத்தியாளர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சின்னசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 5 ஆண்டுகளாக பால் கொள்முதல் விலை உயர்த்தப்படாத நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உயர்வு விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை என்றும், அது அவர்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.தீவனத்தின் விலை மற்றும் தொழிலாளர் கூலி உள்ளிட்ட உற்பத்திச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், பால் கொள்முதல் விலையை வெறும் ரூ.1 மட்டுமே உயர்த்தியிருப்பது கண்டனத்துக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.மேலும், கறவை மாடுகளின் நிலையை கருத்தில் கொண்டு, பாலின் கொழுப்புச் சத்து 4 சதவீதம் மற்றும் இதர சத்துக்கள் 8 சதவீதம் என்ற அடிப்படையில் கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கூட்டுறவு பால் சங்கங்கள் முறையாக செயல்படுவதற்காக 5 சதவீதம் மார்ஜின் தொகை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.தமிழ்நாட்டில் ஆவின் பால் பற்றாக்குறையை சமாளிக்க வெளிமாநிலங்களில் இருந்து பால் பவுடர் மற்றும் வெண்ணெய் வாங்கி, அவற்றை பாலுடன் கலந்து விற்பனை செய்யும் நடைமுறையை மாற்ற வேண்டும் என்றும் சின்னசாமி தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக தமிழகத்திலேயே பால் கொள்முதல் விலையை உயர்த்தி, உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.சட்டமன்ற கூட்டத்தொடரில் பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.50-ம், எருமைப்பாலுக்கு லிட்டருக்கு ரூ.60-ம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.இந்தக் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலை உயர்த்தப்படாவிட்டால், ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்குவதை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தமிழக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.