ஆடித்தபசு விழா: தென்காசி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ள சங்கரநாராயண சுவாமி கோவிலின் ஆண்டு தோறும் நடைபெறும் ஆடித்தபசு திருவிழா இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில், ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட தேரில் கோமதி அம்பாள் ரத வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.விழாவின் உச்ச நிகழ்வான ஆடித்தபசு காட்சி, 11-வது திருநாளான நாளை (28.07.2026) நடைபெறுகிறது. இதற்காக கோவிலிலும் சுற்றுப்புறங்களிலும் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுடன் அண்டை மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.இந்த விழாவை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்திற்கு நாளை (28.07.2026) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அரசு தேர்வுகள் நடைபெறும் நிலையில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்று மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விடுமுறைக்கான ஈடாக ஆகஸ்ட் 1-ஆம் தேதி வேலை நாளாக கடைப்பிடிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.ஆடித்தபசு காட்சியை முன்னிட்டு நாளை காலை கோவிலில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். காலை 8.30 மணிக்கு சந்திர மவுலீஸ்வரர் மற்றும் உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகமும், 9.30 மணிக்கு கோமதி அம்பாளுக்கு அபிஷேக அலங்காரமும் நடைபெறவுள்ளது.பகல் 12 மணிக்குப் பிறகு, கோமதி அம்பாள் தங்கச்சப்பரத்தில் தெற்கு ரத வீதியில் உள்ள ஆடித்தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளுகிறார். மாலை 4.30 மணிக்குப் பிறகு சங்கரநாராயண சுவாமியின் தபசு காட்சி புறப்பாடு நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 6.05 மணிக்கு ரிஷப வாகனத்தில் எழுந்தருளும் சங்கரநாராயண சுவாமி, கோமதி அம்பாளுக்கு தபசு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.இரவு 11 மணிக்கு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் புறப்பாடு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இரவு 11.45 மணிக்கு யானை வாகனத்தில் எழுந்தருளும் சங்கரலிங்க சுவாமி, கோமதி அம்பாளுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.