அம்பேத்கரை தனது தலைவராக போற்றியவர் பெரியார்: அமைச்சர் வன்னியரசு
புரட்சியாளர் அம்பேத்கரை தனது தலைவராக ஏற்றுப் போற்றியவர் தந்தை பெரியார் என்று தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி சட்டப்பேரவையில் சமூக நீதித்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதற்கு பதிலளித்து பேசியபோது, திண்டிவனம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வெற்றிக்கு பாடுபட்ட திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு நன்றி தெரிவித்தேன்.அப்போது, "நாங்கள் மட்டுமே நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறோம்; திமுக தரப்பில் இருந்து நன்றி தெரிவிக்கப்படவில்லை" என்று விளையாட்டாக குறிப்பிட்டேன். இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உடனடியாக எழுந்து பேசினார். திமுக தலைவருக்கும் திருமாவளவனுக்கும் இடையிலான உறவு வெறும் தேர்தல் கூட்டணி அல்ல; அது கொள்கை அடிப்படையிலான கூட்டணி என்றும், திருமாவளவனை தனது அரசியல் ஆசானாக ஏற்கெனவே கூறியிருப்பதாகவும், இப்போதும் அதையே கூறுவதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். அவரது இந்த வெளிப்படையான கருத்துக்கு அப்போதே நன்றி தெரிவித்தேன். தற்போது லட்சக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகள் சார்பிலும் அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டிய கடமை உள்ளது.ஆனால், பெரியாரை தனது ஆசான் என்று கூறும் உதயநிதி, திருமாவளவனையும் ஆசான் எனக் குறிப்பிடுவது குறித்து சிலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.