அணைகளில் வேகமாக சரியும் நீர்மட்டம்: தமிழகத்தில் வறட்சி அபாயம் தீவிரம்
தமிழகத்தின் பல்வேறு அணைகள் மற்றும் பாசன ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், இந்த ஆண்டு மாநிலம் கடுமையான வறட்சி பாதிப்பை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மாநிலத்தில் மொத்தம் 90 அணைகள் மற்றும் 14,141 பாசன ஏரிகள் உள்ளன. நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீர்நிலைகளில், கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு தண்ணீர் இருப்பு குறைந்துள்ளது. 90 அணைகளின் மொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி. என்ற நிலையில், தற்போது அவற்றில் 71.2 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.அதேபோல், 14,141 பாசன ஏரிகளில் 3,483 ஏரிகள் முழுமையாக வறண்டுள்ளன. மேலும், 6,127 ஏரிகளில் மிகவும் குறைந்த அளவிலேயே தண்ணீர் இருப்பதால், அவையும் விரைவில் வறண்டுவிடும் சூழல் நிலவுகிறது.இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழையும் தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவிலும் மழைப்பொழிவு குறைந்திருப்பதால், காவிரி நீரை திறந்துவிடுவதில் கர்நாடக அரசு சிக்கலை சந்தித்து வருகிறது.
இதன் காரணமாக, வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணையை இந்த ஆண்டு திட்டமிட்ட நாளில் திறக்க முடியவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொதுவாக அக்டோபர் மாத இறுதியில் தொடங்கும் நிலையில், அதற்கு இன்னும் சுமார் மூன்று மாதங்கள் உள்ளன. அதுவரை அணைகள் மற்றும் ஏரிகளில் உள்ள தற்போதைய நீர் இருப்பு போதுமானதாக இருக்காது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், வடகிழக்கு பருவமழை எந்த அளவுக்கு பெய்யும் என்பதும் உறுதியாக தெரியாததால், பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதைப் போன்ற கடுமையான வறட்சி இந்த ஆண்டும் உருவாகும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.