2026 முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
சென்னை: 2026-2027ஆம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இப்போட்டிகள், இந்த ஆண்டு பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளாக நடைபெறுகின்றன. தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகள் செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை நடைபெறுகின்றன. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இந்த ஆண்டு முதல்-அமைச்சர் கோப்பை போட்டிகளில் பங்கேற்க இதுவரை இல்லாத அளவுக்கு 26,38,267 பேர் இணையதளம் மூலம் பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார். கடந்த ஆண்டு 16.28 லட்சம் பேர் பதிவு செய்திருந்த நிலையில், இந்த ஆண்டு 10,09,918 பதிவுகள் கூடுதலாக கிடைத்துள்ளதாகவும் கூறினார். இந்த போட்டிகளில் 14,86,912 பள்ளி மாணவ-மாணவியர்கள், 5,35,965 கல்லூரி மாணவ-மாணவியர்கள், 38,058 மாற்றுத்திறனாளிகள், 69,890 அரசு ஊழியர்கள் மற்றும் 5,07,741 பொதுமக்கள் என பெருமளவில் பங்கேற்கின்றனர். மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் மொத்தம் 1,09,633 வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வெல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். சென்னையில் 99,119 பேர் பதிவு செய்துள்ள நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொறுப்பு வகிக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக 1,74,462 பேர் பதிவு செய்துள்ளனர். சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு நிதியுதவியாக தலா ரூ.7 லட்சம் வழங்கப்படுகிறது.