2-வது நாளாக தொடர்ந்த எதிர்க்கட்சி அமளி; நாடாளுமன்ற இரு அவைகளும் நண்பகல் வரை ஒத்திவைப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாவது நாளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், மக்களவையும் மாநிலங்களவையும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.நேற்று காலை 11 மணிக்கு தேசிய கீதத்துடன் தொடங்கிய மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தொடரில் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, வருமான வரி திருத்த மசோதா, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் திருத்த மசோதா, பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் தொடர்பான திருத்த மசோதா, தேசிய கவுரவத்துக்கு அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அபிவிருத்தி திருத்த மசோதா உள்ளிட்ட ஆறு மசோதாக்களை மத்திய அரசு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.ஆனால், கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளின் நடவடிக்கைகளும் நாள் முழுவதும் பாதிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டன.இந்த சூழலில், இன்று காலை மீண்டும் கூடிய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் மீண்டும் முழக்கங்களை எழுப்பி எதிர்ப்பை வெளிப்படுத்தின.டெல்லியில் நேற்று நடைபெற்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் இளைஞர் போராட்டத்தின் போது காவல்துறையினர் தடியடி நடத்தியதாகவும், அதில் பலர் காயமடைந்ததாகவும் கூறி எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி அவையில் கோஷங்களை எழுப்பினர்.இதன் காரணமாக, மக்களவையும் மாநிலங்களவையும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.