ராமநாதபுரத்திற்கு முதல்முறையாக வரும் தொழில் திட்டம்: புதிய நிறுவனங்கள் எந்தெந்த மாவட்டங்களுக்கு வருகிறது?
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் புதிய தொழில் திட்டங்கள் மற்றும் விரிவாக்கத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்முறையாக தொழில் திட்டம் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்று வரும் 17-ந் தேதியுடன் 100 நாட்கள் நிறைவடைகிறது. இந்த காலகட்டத்திற்குள் ரூ.1 லட்சம் கோடி அளவிலான தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. சென்னையில் இன்று நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.இதில் 55 திட்டங்கள் புதிதாக தொடங்கப்பட உள்ள திட்டங்களாகவும், 50 திட்டங்கள் ஏற்கனவே செயல்பட்டு வரும் நிறுவனங்களின் விரிவாக்க நடவடிக்கைகளாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
முக்கிய தொழில் திட்டங்கள்
ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்:
தூத்துக்குடியில் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம், ஏவுகலன்கள் உற்பத்தி, சேமிப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் சோதனைக்கான வசதிகளை அமைக்க உள்ளது. இதற்காக ரூ.250 கோடி முதலீடு செய்யப்பட்டு, 500 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட உள்ளது.
அக்னிகுல் காஸ்மோஸ்:
தூத்துக்குடியில் அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம் மீண்டும் பயன்படுத்தக்கூடிய திரவ உந்துவிசை ஏவுகலன்களுக்கான உற்பத்தி மற்றும் ஒருங்கிணைப்பு வசதிகளை அமைக்கிறது. ரூ.400 கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்தின் மூலம் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
அல்ட்ராவயலட்:
கிருஷ்ணகிரியில் மின்சார இருசக்கர வாகன உற்பத்தி ஆலையை அல்ட்ராவயலட் நிறுவனம் அமைக்க உள்ளது. ரூ.779 கோடி முதலீட்டில் உருவாகும் இந்த ஆலையில் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படும்.
சூப்பர் மைக்ரோ:
அமெரிக்காவைச் சேர்ந்த சூப்பர் மைக்ரோ நிறுவனம் சென்னையில் சர்வர் உற்பத்தி மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தை அமைக்கவுள்ளது. இதற்காக ரூ.477 கோடி முதலீடு செய்யப்பட்டு, 150 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.
ஒய்.கே.கே., ஜப்பான்:
ஜப்பானைச் சேர்ந்த ஒய்.கே.கே. நிறுவனம் திருவள்ளூரில் ஜிப்பர்கள் மற்றும் இணைப்பு சாதனங்கள் தயாரிக்கும் ஆலையை அமைக்கிறது. ரூ.1,651 கோடி முதலீட்டில் உருவாகும் இந்த திட்டம் மூலம் 4,316 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ஷைலி இன்ஜினீயரிங் ப்ளாஸ்டிக்ஸ்:
நுகர்வோர் மின்னணு சாதனங்களுக்கான உதிரிபாகங்களை தயாரிக்கும் ஆலையை தமிழ்நாட்டில் ஷைலி இன்ஜினீயரிங் ப்ளாஸ்டிக்ஸ் நிறுவனம் அமைக்க உள்ளது. குஜராத்துக்கு வெளியே அந்நிறுவனம் மேற்கொள்ளும் முதல் முதலீடு இதுவாகும். ரூ.500 கோடி முதலீட்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் 400 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும்.
ஆவிட் குழுமம்:
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆவிட் குழுமம், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்கட்டமைப்பு, சுற்றுலா, சுகாதாரம், சுரங்க உபகரண உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
முதல் கட்டமாக திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ரூ.7,000 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் 12 ஆயிரம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு உருவாகும்.
பிட்சர், ஜெர்மனி:
ஜெர்மனியைச் சேர்ந்த பிட்சர் நிறுவனம், இந்தியாவில் தனது முதல் எச்.வி.ஏ.சி. கம்ப்ரசர் உற்பத்தி ஆலையை காஞ்சிபுரத்தில் அமைக்கிறது. சுமார் ரூ.300 கோடி முதலீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
ஜெ.கே. டயர்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் டயர் உற்பத்தித் திட்டத்தை ஜெ.கே. டயர் நிறுவனம் விரிவுபடுத்த உள்ளது. இதற்காக ரூ.5,143 கோடி முதலீடு செய்யப்படுவதுடன், 3,510 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.
டைம்லர், ஜெர்மனி:
ஜெர்மனியைச் சேர்ந்த டைம்லர் நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் ஒரகடம் தொழிற்பூங்காவில் வணிக வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. தற்போது ஒரகடத்தில் உள்ள 400 ஏக்கர் பரப்பிலான உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி மையத்தை மேலும் மேம்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ரூ.4,000 கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்படும் இந்த விரிவாக்கத்தின் மூலம் வணிக வாகனங்களுக்கான வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் 400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.பல மாவட்டங்களில் தொழில் முதலீடுகள்
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மூலம் திருவள்ளூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், கடலூர், சென்னை, தூத்துக்குடி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி, ராணிப்பேட்டை, வேலூர், கோவை, ராமநாதபுரம், ஈரோடு, கரூர், நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பூர், புதுக்கோட்டை, திருச்சி மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்முறையாக தொழில் திட்டம் தொடங்கப்பட இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.மேலும், உயிரியல் அறிவியல், வாகன உற்பத்தி, மின்னணுவியல் மற்றும் குறைக்கடத்திகள், ஆழ்தொழில்நுட்பம், நுகர்வோர் மின்னணுவியல், ஜவுளி, விண்வெளி மற்றும் பாதுகாப்பு, கடல்சார் தொழில்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.