மேகதாது அணை விவகாரம்: மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. நோட்டீஸ்
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது பகுதியில் புதிய அணை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்தின் விவசாயம் மற்றும் நீர் ஆதாரங்கள் பாதிக்கப்படும் எனக் கூறி, தமிழக அரசு மற்றும் விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், மேகதாது அணை தொடர்பாக மாநிலங்களவையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுத்துப்பூர்வமாக கேள்விகளை எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய ஜல்சக்தி துறை இணை மந்திரி ராஜ் பூஷண் சவுத்ரி அளித்த பதிலில், காவிரி நீர் தொடர்பாக உச்சநீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில், காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவொரு கட்டுமானத்தையும் மேற்கொள்ள கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரியின் அனுமதி பெற வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.மத்திய மந்திரியின் இந்த பதில் தமிழகத்தில் அரசியல் ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதையடுத்து, மேகதாது அணை விவகாரத்தில் மத்திய மந்திரி அளித்த பதிலை திரும்பப் பெற வேண்டும் என்றும், தமிழகத்தின் நீர் உரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் விஜய் பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.இந்த சூழலில், மேகதாது அணை விவகாரம் குறித்து மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி நோட்டீஸ் வழங்கியுள்ளார். அதில், கேள்வி நேரத்தை ஒத்திவைத்து மேகதாது அணை தொடர்பாகவும், தமிழகத்திற்கு உடனடியாக 4 டிஎம்சி தண்ணீர் திறந்து விடுவது குறித்தும் விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும், மேகதாது அணை கட்டுவதற்கு தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்திருப்பது தவறான பதில் என்றும் பிரவீன் சக்கரவர்த்தி குற்றம் சாட்டியுள்ளார்.