முதல்-அமைச்சரின் உடல்மொழி கண்ணியமான அணுகுமுறைக்கு மாறானதாகவும், மனித மாண்புகளுக்கு எதிரானதாகவும் இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்-அமைச்சர் பதிலளித்தபோது, திமுக தலைவரும் முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை கேலி செய்யும் வகையில் அவரது உடல்மொழி இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு முதல்-அமைச்சர் தரப்பில், அதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதுபோன்ற உடல்மொழி கண்ணியமான அணுகுமுறை அல்ல என்றும், மனித மாண்புகளை பாதிக்கும் வகையிலானது என்றும் விசிக சார்பில் சுட்டிக்காட்டுகிறோம். எந்தச் சூழ்நிலையிலும் ஒருவரின் தன்மதிப்பை குறைத்து மதிப்பிடுவதோ அல்லது அவரை மனதளவில் காயப்படுத்துவதோ நாகரிகமான செயலாகாது. ஒருவரின் செயல்பாடுகள் குறித்து அரசியல் ரீதியாக விமர்சிப்பது வேறு; தனிப்பட்ட முறையில் அவரது தன்மதிப்பை புண்படுத்தும் வகையில் விமர்சிப்பது வேறு.
Advertisement
கல்வி, பொருளாதாரம், அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு வலிமைகள் இல்லாத சாதாரண மனிதரைக் கூட காயப்படுத்தும் அணுகுமுறை ஏற்றுக்கொள்ள முடியாதது. அகவையில் மூத்தவர்களை மதிப்பது மனித மாண்புகளில் உயர்ந்த பண்பாகும். எனவே, மிகுந்த பொறுப்புமிக்க பதவியில் இருக்கும் முதல்-அமைச்சர், எதிர்காலத்தில் தனது உடல்மொழியில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை பயக்கும். முதல்-அமைச்சரின் பதிலுரையைத் தொடர்ந்து மறுநாள், அவரது உரையின் சில பகுதிகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பான விவாதத்தின்போது சட்டத்துறை அமைச்சர் இடைமறித்து தெரிவித்த கருத்து வரலாற்று ரீதியாக தவறானது. மிசா காலத்தில் நடைபெற்ற அரச ஒடுக்குமுறை குறித்து நாடு நன்கு அறியும். அந்தக் கொடுமையான ஒடுக்குமுறைக்கு ஆளான திமுக தலைவர் குறித்து முற்றிலும் தவறான கருத்து பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. எனவே, சட்டத்துறை அமைச்சர் தனது கருத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.