மீண்டும் போராட்டம் நடத்துவோம்: மத்திய அரசுக்கு கரப்பான் ஜனதா கட்சி எச்சரிக்கை
'நீட்' வினாத்தாள் முறைகேட்டை எதிர்த்து கடந்த ஜூன் 20-ஆம் தேதி டெல்லியில் கரப்பான் ஜனதா கட்சி தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்தது. அக்கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே தலைமையில் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கு ஆதரவாக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.நாளுக்கு நாள் தீவிரமடைந்த இந்த போராட்டத்தின் பின்னர் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யக் கூடாது என்பதையும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை கரப்பான் ஜனதா கட்சி முன்வைத்திருந்தது.
அந்த நிபந்தனைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், போராட்டத்தில் பங்கேற்றவர்களை டெல்லி போலீசார் கைது செய்து வருவதாக கரப்பான் ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால் மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், போராட்டக்காரர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.