மதுரவாயலில் போதை மாத்திரைகள் விற்பனை: பெண் ரவுடி உட்பட 3 பேர் கைது
சென்னை மதுரவாயல் ஓம் சக்தி நகர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் அளித்த பதில்களில் முரண்பாடுகள் இருந்ததைத் தொடர்ந்து, போலீசார் அவர்களை சோதனை செய்தனர். இதில் அவர்களிடம் போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மதுரவாயலைச் சேர்ந்த ரவுடி கோகுல்ராஜ், நாராயணமூர்த்தி மற்றும் பெண் ரவுடி தாரணி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து மொத்தம் 1,020 போதை மாத்திரைகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.முதற்கட்ட விசாரணையில், இந்த மாத்திரைகளை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் விற்பனை செய்ய அவர்கள் திட்டமிட்டிருந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைதான தாரணி மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை முயற்சி, அடிதடி, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக 3 பேர் மீதும் மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.