பாடல் வரிகளைப் போலவே நிகழ்ந்த சோகம்!.. ஜிம்முக்கு வெளியே பிரபல பாடகர் சுட்டுக்கொலை
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் பிரபல ஹரியான்வி பாடகரும், யூடியூபருமான அங்கித் பால்யன் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஷாம்லி மாவட்டத்தின் சி.பி. குப்தா காலனி பகுதியில் ஆகஸ்ட் 26-ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. உடற்பயிற்சி கூடத்துக்குச் சென்றுவிட்டு அங்கித் பால்யன் வெளியே வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதாக கூறப்படுகிறது.இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அங்கித் பால்யன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.பாடகராக மட்டுமின்றி நடிகராகவும், யூடியூப் படைப்பாளராகவும் அங்கித் பால்யன் அறியப்பட்டவர்.
அவரது யூடியூப் பக்கத்தை பல லட்சம் பேர் பின்தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. அவரது திடீர் மரணம் ஹரியான்வி இசை உலகிலும் சமூக வலைதள வட்டாரத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையே, அவர் ஏற்கனவே பாடியிருந்த ஒரு பாடலில் இடம்பெற்றிருந்த வரிகளை ஒத்த வகையில் அவரது மரணம் நிகழ்ந்திருப்பதாக கூறப்படுவது இந்த சம்பவத்தின் அதிர்ச்சியை மேலும் அதிகரித்துள்ளது. இதனால் அவரது ரசிகர்களும் நண்பர்களும் பெரும் சோகத்தில் உள்ளனர்.இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.