நீட் தேர்வு முறைகேட்டில் தொடர்புடையவர்களுக்கு கடும் தண்டனை; பிரதமர் உறுதி என கிரண் ரிஜிஜூ தகவல்
நீட் தேர்வில் நடைபெற்றதாக கூறப்படும் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு சம்பவங்களில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளதாக மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கிரண் ரிஜிஜூ, நீட் வினாத்தாள் கசிவு குறித்த தகவல் வெளியான உடனேயே மத்திய அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்ததாக கூறினார்.இதுவரை இந்த வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டதாகவும், மாணவர்களின் நலனையும் தேர்வு முறையின் நம்பகத்தன்மையையும் பாதுகாக்க அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாத வகையில் மறுதேர்வு நடத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டதாகவும், அந்தத் தேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டு முடிவுகளும் தாமதமின்றி வெளியிடப்பட்டதாக பிரதமர் கூறியதாக ரிஜிஜூ விளக்கினார்.
மேலும், இனி இதுபோன்ற வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடைபெறாத வகையில் பல்வேறு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.இத்தகைய கடுமையான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு முன்மாதிரியாக இருக்கும் வகையில் தண்டனை கிடைக்க வேண்டும் என்றும், நாட்டின் சிறந்த வழக்கறிஞர்களின் உதவியுடன் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியதாக அவர் கூறினார்.மேலும், பல்வேறு நாடுகளுடன் இந்தியா மேற்கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் கடந்த சில மாதங்களில் நாடு பெற்றுள்ள முன்னேற்றங்கள் குறித்து பிரதமர் கூட்டத்தில் எம்.பி.க்களிடம் விளக்கமளித்ததாகவும் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.அதேவேளை, நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை அரசியல் நோக்கில் அணுகாமல் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாக அவர் கூறினார்.