நாமக்கல்–அரியலூர் புதிய ரெயில் பாதை திட்டம்: விரிவான அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல்
நாடாளுமன்ற மக்களவையில் எம்.பி. அருண் நேரு எழுப்பிய கேள்விக்கு மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார்.அதில், தமிழகத்தில் பெரம்பலூர் வழியாக நாமக்கல்–அரியலூர் இடையே புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கான விரிவான செயல்திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அந்த அறிக்கை தயாரிக்கப்பட்ட பிறகு, மாநில அரசுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, நிதி ஆயோக் மற்றும் மத்திய நிதியமைச்சகத்தின் மதிப்பீட்டு ஒப்புதல் கிடைத்த பின்னர் திட்டத்திற்கு இறுதி நிர்வாக அனுமதி வழங்கப்படும் என்றும் கூறினார்.மேலும், தமிழகத்தில் ரெயில்வே மேம்பாட்டு பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார். 2009 முதல் 2014 வரை ஆண்டுக்கு ரூ.879 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2026–27 நிதியாண்டில் அது எட்டு மடங்கு அதிகரித்து ரூ.7,611 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.இதனுடன், நடப்பாண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி நிலவரப்படி, 8 புதிய ரெயில் பாதைகள், 3 அகல ரெயில் பாதை மாற்றுத் திட்டங்கள் மற்றும் 8 இரட்டை வழித்தடங்கள் உள்ளிட்ட மொத்தம் 19 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இத்திட்டங்கள் 1,874 கிலோமீட்டர் தொலைவை உள்ளடக்கியவை என்றும், அவற்றின் மொத்த மதிப்பு ரூ.27,282 கோடி என்றும் அமைச்சர் தெரிவித்தார்.அதேபோல், தமிழகத்தில் இரண்டு பெரிய மின்னணு உற்பத்தி மையங்களை அமைக்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மணலூரில் 474.3 ஏக்கர் பரப்பளவில் ரூ.587.47 கோடி மதிப்பிலும், பிள்ளைப்பாக்கத்தில் 379.3 ஏக்கர் பரப்பளவில் ரூ.424.55 கோடி மதிப்பிலும் இந்த மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக அஷ்வினி வைஷ்ணவ் தனது பதிலில் குறிப்பிட்டார்.