நெல்லையில் அரிவாளுடன் சுற்றிய 6 பேர் அதிரடி கைது: கார், பைக்குகள் பறிமுதல்
திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியில் அரிவாள்களுடன் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 6 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 3 அரிவாள்களை பறிமுதல் செய்துள்ளனர்.சேரன்மகாதேவி உட்கோட்டத்திற்கு உட்பட்ட முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லையில் இன்று அதிகாலை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் அரிவாள்களுடன் சுற்றிய 6 பேரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்களில், 19 வழக்குகள் நிலுவையில் உள்ள சரித்திரப்பதிவேடு குற்றவாளி மணிகண்டன் என்ற வாத்துமணி (27), 18 வழக்குகள் உள்ள காளிமுத்து (23), 11 வழக்குகள் உள்ள பொன்ரங்கம் என்ற பொன்ராஜ் (19), மேலும் சுடலை கிருஷ்ணன் என்ற முருகன் (40), இசக்கிமுத்து என்ற இயேசுராஜா (29), மகாராஜன் (18) ஆகியோர் அடங்குவர்.கைது நடவடிக்கையின் போது பொன்ரங்கம் என்ற பொன்ராஜ் தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது கீழே விழுந்ததில் அவரது வலது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 அரிவாள்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.