நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கோவில்பட்டியில் மொட்டையடித்து சமூக ஆர்வலர்கள் போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபாதைகள் மற்றும் சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் மொட்டையடித்து, சங்கு ஊதி நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி பகுதியில் முக்கிய சாலைகள் மற்றும் நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக இருப்பதாகக் கூறி, அவற்றை அகற்ற நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து மனுக்கள் அளித்து வந்தனர். இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டாலும், அது முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்து, விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.அதிகாரிகள் முழுமையான நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக குற்றம்சாட்டிய சமூக ஆர்வலர்கள், கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் மற்றும் பயணியர் விடுதி முன்பு மொட்டையடித்து, சங்கு ஊதியபடி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
நகராட்சி அலுவலகம் முன்பு சமூக ஆர்வலர் கந்தவேலும், பயணியர் விடுதி முன்பு முருகனும் மொட்டையடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர், கோவில்பட்டி நகராட்சி பொறுப்பு பொறியாளர் சணல்குமாரிடம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டன. நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் மனு அளித்தபோது, உதவி கோட்டப் பொறியாளர் ரத்தினபாபுவுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.