தொழில்முனைவோருக்கான 3 நாள் மொபைல் போன் பழுது நீக்கம் மற்றும் சேவைப் பயிற்சி..!
சென்னையில் தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், மொபைல் போன் பழுது நீக்கம் மற்றும் சேவை தொடர்பான மூன்று நாள் பயிற்சி முகாம் வரும் செப்டம்பர் 16 முதல் 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்தப் பயிற்சி, மொபைல் போன் ஹார்ட்வேர் மற்றும் Chip Level Service துறையில் தொழில்துறைக்கு தேவையான தொழில்நுட்ப அறிவு மற்றும் செய்முறை திறன்களை வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சியை நிறைவு செய்பவர்கள் சுயதொழில், சர்வீஸ் சென்டர் அல்லது டெக்னீஷியன் பணிகளுக்கு தயாராகும் வகையில் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள் மொபைல் போன்களின் அடிப்படை அறிமுகம், பல்வேறு வகையான தொலைபேசிகள், ஆண்ட்ராய்டு மற்றும் சிப்செட் தயாரிப்பாளர்கள் குறித்த விளக்கம் ஆகியவை பயிற்சியில் இடம்பெறும். மேலும், சார்ஜர்கள், பேட்டரிகள் மற்றும் டிஸ்ப்ளேக்களின் வகைகள், அவற்றில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் குறித்தும் கற்றுத்தரப்படும். Ear Speaker, Loud Speaker, Microphone, Charging Connector உள்ளிட்ட பாகங்களில் ஏற்படும் பழுதுகளை கண்டறிந்து சரிசெய்வது, FFC Strips, கேபிள்கள், சென்சார்கள் மற்றும் Charging Port தொடர்பான பழுதுபார்ப்பு முறைகளும் பயிற்சி அளிக்கப்படும். Chip Level Servicing-ன் அடிப்படைகள், SMT கூறுகள், Resistor, Capacitor, Diode, IC ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்படும். மேலும், கூறுகளை அகற்றுதல், Soldering தொழில்நுட்பங்கள் மற்றும் Multimeter மூலம் கூறுகளை பரிசோதித்து கண்டறியும் செய்முறை பயிற்சிகளும் இடம்பெறும். மொபைல் மதர்போர்டில் உள்ள CPU, EMMC, Network, Battery, CC Board, Display மற்றும் Battery Section உள்ளிட்ட மின்னழுத்தப் பிரிவுகள் குறித்தும் பயிற்சி வழங்கப்படும். Voltage, Current, Amps மற்றும் Watts ஆகியவற்றின் அடிப்படைகள் விளக்கப்படுவதுடன், மதர்போர்டில் Voltage-களை கண்டறியும் முறைகள் மற்றும் Dead Condition-ல் உள்ள மொபைல்களை சரிசெய்யும் நுட்பங்களும் கற்றுத்தரப்படும்.