தேரை உரசிய உயர் மின் கம்பி: ரத யாத்திரையில் மின்சாரம் தாக்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற ஜெகநாதர் ரத யாத்திரையின்போது தேரில் மின்சாரம் பாய்ந்த விபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.குந்தி மாவட்டத்தின் தோர்பா பகுதியில் இன்று நடைபெற்ற ஜெகநாதர் ரத யாத்திரையில், சிறப்பு அலங்காரத்துடன் தயார் செய்யப்பட்ட தேரில் ஜெகநாதர் எழுந்தருளியதைத் தொடர்ந்து வழிபாடுகள் நடத்தப்பட்டன. பின்னர் பக்தர்கள் உற்சாகமாக தேரை இழுத்து ஊர்வலத்தை முன்னெடுத்தனர். இதில் அனைத்து வயதினரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.ஊர்வலம் முக்கிய சாலைகள் வழியாக சென்றுகொண்டிருந்தபோது, ஒரு இடத்தில் தேர் 11,000 வோல்ட் உயர் மின்னழுத்த கம்பியை உரசியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தேரில் திடீரென மின்சாரம் பாய்ந்தது. தேரை இழுத்துக் கொண்டிருந்த மாணவர்கள் உள்ளிட்ட பலர் மின்சாரம் தாக்கி கீழே விழுந்தனர்.விபத்து நடந்ததும் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
தகவலறிந்த உள்ளூர் மக்கள் உடனடியாக மின் இணைப்பை நிறுத்தச் செய்து, மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.இந்த சம்பவத்தில் 7 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் முதலில் தோர்பா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 2 மாணவர்கள் மேல்சிகிச்சைக்காக குந்தி சதார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் மருத்துவமனை சென்றடையும் முன்பே இருவரும் உயிரிழந்தனர். மீதமுள்ள காயமடைந்தவர்கள் தோர்பா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த மின்விபத்து தொடர்பாக தோர்பா போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவத்தின் காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.