தெலுங்கானாவில் அதிர்ச்சி: ரூ.1 லட்சத்துக்கு விற்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை
தெலுங்கானா மாநிலத்தில், புதிதாக பிறந்த ஆண் குழந்தை ரூ.1 லட்சத்திற்கு விற்கப்பட்டதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்குகுடம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களான தம்பதியருக்கு கடந்த ஜூன் மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குடும்பத்தில் ஏற்கனவே இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மகபூப்நகர் மாவட்டத்தில் சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு, இடைத்தரகர் ஒருவரின் உதவியுடன் அந்த பச்சிளம் குழந்தையை பெற்றோர் ரூ.1 லட்சத்திற்கு விற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த சம்பவம் குறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் துறை அதிகாரிகள் மகபூப்நகர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, கடந்த 17-ஆம் தேதி குழந்தையை வாங்கிய நபர் மற்றும் இந்த பரிவர்த்தனையில் தொடர்புடைய இடைத்தரகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், மகபூப்நகர் நகரில் வாங்கிய நபரின் வசமிருந்த குழந்தையை போலீசார் மீட்டு, குழந்தைகள் நலக் குழுவிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். குழந்தையை விற்பனை செய்ய பெற்றோர் எடுத்த முடிவுக்குப் பின்னால் இருந்த காரணங்கள் என்ன என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.