தூத்துக்குடி விசைப்படகுடன் 9 மீனவர்கள் சிறைபிடிப்பு: லட்சத்தீவு அருகே பரபரப்பு
லட்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த விசைப்படகு ஒன்றை கவராத்தி கடற்படையினர் கைப்பற்றியதுடன், அதில் இருந்த 9 மீனவர்களையும் விசாரணைக்காக சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தைச் சேர்ந்த நட்டார் என்ற மிக்கேல்ராஜுக்கு சொந்தமான செவுள் வலை விசைப்படகில் 9 மீனவர்கள் கடந்த செப்டம்பர் 4-ம் தேதி கேரள மாநிலம் கொச்சின் துறைமுகத்தில் இருந்து லட்சத்தீவுகள் நோக்கி மீன்பிடிக்க புறப்பட்டனர். இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் கவராத்தி தீவு அருகே விசைப்படகு சென்று கொண்டிருந்தபோது, பாதுகாப்பு காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்ட கடல் பகுதிக்குள் நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது.