தூத்துக்குடி: தேவாலய கோபுர கான்கிரீட் சரிந்து விபத்து – 4 தொழிலாளர்கள் உயிருடன் மீட்பு
தூத்துக்குடி அருகே வெள்ளப்பட்டி கிராமத்தில் தேவாலயத்திற்காக புதிதாக கட்டப்பட்டு வந்த கோபுரத்தின் கான்கிரீட் பகுதி திடீரென சரிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். பின்னர் தீயணைப்புத் துறையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர்.வெள்ளப்பட்டியில் உள்ள புனித நல் ஆலோசனை மாதா ஆலயத்தில் புதிய கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சாரம் அமைக்கப்பட்டு, இன்று மதியம் 12.30 மணியளவில் கான்கிரீட் போடும் பணி நடந்தது. அப்போது புதிதாக அமைக்கப்பட்ட கான்கிரீட் தளம் எதிர்பாராதவிதமாக சரிந்து விழுந்தது.இதில், மேல்பகுதியில் பணியில் இருந்த 4 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். தகவல் கிடைத்ததும் தூத்துக்குடி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட முயற்சிக்குப் பிறகு இடிபாடுகளில் சிக்கிய 4 பேரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.மீட்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே, சம்பவம் தொடர்பாக தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், கட்டுமானப் பகுதி இடிந்து விழுந்ததில் 10-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால், வேறு தொழிலாளர்கள் யாரேனும் கான்கிரீட் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனரா என்பதை கண்டறியும் பணியில் தீயணைப்பு வீரர்களும் ஊழியர்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.இந்த சம்பவத்தால் வெள்ளப்பட்டி பகுதியில் பரபரப்பும் சோகமும் ஏற்பட்டுள்ளது.