திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை எங்கெல்லாம் கரைக்கலாம்?
திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளை கரைக்க அனுமதிக்கப்பட்டுள்ள இடங்கள் குறித்த விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 14-ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது மற்றும் அவற்றை நீர்நிலைகளில் கரைப்பது தொடர்பான வழிமுறைகள் குறித்து மாவட்ட கலெக்டர் வந்தனா கார்க் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.அதில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தமிழகம் நீண்ட காலமாக சிறப்பான கவனம் செலுத்தி வருவதாகவும், இயற்கை வளங்களை பாதுகாப்பது பொதுமக்களின் முக்கிய கடமை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல், ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்கு முக்கிய ஆதாரமாக இருப்பதால், அவற்றை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப, மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். இதன்மூலம் நீர்நிலைகளும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படாமல் பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.மேலும், களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகள் மட்டுமே நீர்நிலைகளில் பாதுகாப்பாக கரைக்க அனுமதிக்கப்படும்.
பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக், தெர்மாக்கோல் உள்ளிட்ட பொருட்கள் கலக்காத, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மூலப்பொருட்களால் சிலைகள் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.சிலைகளின் ஆபரணங்களை உருவாக்க உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் உள்ளிட்ட இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம். சிலைகளுக்கு பளபளப்பு ஏற்படுத்த மரங்களிலிருந்து கிடைக்கும் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம். ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை தவிர்க்க வேண்டும்.அதேபோல், சிலைகளை அலங்கரிக்க நச்சுத்தன்மை கொண்ட வண்ணப்பூச்சுகள் மற்றும் ரசாயனப் பொருட்களை பயன்படுத்தாமல், இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் தயாரிக்கப்பட்ட அலங்கார ஆடைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.சிலைகளை கரைக்க அனுமதிக்கப்பட்ட இடங்கள்திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கீழ்க்கண்ட இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது:* தாமரைக்குளம்
* சிங்காரப்பேட்டை ஏரி
* செங்கம் பச்சையம்மன் கோவில் குளம்
* கோனேரிராயன் குளம்
* ஐந்து கண் வாராவதி குளம்
* பூமா செட்டிகுளம்
* போளூர் ஏரி
* கூர் ஏரிசுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் கொண்டாட வேண்டும் என மாவட்ட கலெக்டர் வந்தனா கார்க் கேட்டுக்கொண்டுள்ளார்.