திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள ஆலங்காயம் பெத்தூர் பகுதியில் விவசாய கிணற்றில் இரண்டு சிறுவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெத்தூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் பிரகாசத்துக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் உள்ள கிணற்றில் இரண்டு சடலங்கள் மிதப்பதை பிரகாசம் பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக ஆலங்காயம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.தகவலின் பேரில் போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கிணற்றில் இருந்த இரண்டு சிறுவர்களின் சடலங்களையும் மீட்டனர்.
Advertisement
மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு சுமார் 9 மற்றும் 15 வயது இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, சிறுவர்களின் அடையாளம் இதுவரை தெரியவில்லை.இதையடுத்து, அப்பகுதியில் உள்ள விடுதிகளில் இருந்து மாணவர்கள் யாரேனும் காணாமல் போயுள்ளனரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவர்கள் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்களா அல்லது சம்பவத்துக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.