தவெக வேட்பாளர் வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற பெரியகருப்பன்
சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில், தமிழக வெற்றி கழக (தவெக) வேட்பாளர் சீனிவாச சேதுபதி, திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனை ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிக்காக அனுப்பப்பட வேண்டிய தபால் வாக்குகள் தவறுதலாக திருப்பத்தூர் மாவட்ட சட்டமன்றத் தொகுதிக்கு அனுப்பப்பட்டதாகக் கூறி, பெரியகருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. மேலும், தமிழக சட்டப்பேரவையில் அரசுக்கு எதிராக நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி பங்கேற்று வாக்களிக்கக் கூடாது என்றும் இடைக்காலத் தடை விதித்தது.
இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவுக்கும் வழக்கின் மேலதிக விசாரணைக்கும் இடைக்காலத் தடை விதித்தது.இந்த வழக்கு நேற்று நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பெரியகருப்பன் தாக்கல் செய்த இடையீட்டு மனுவை ஏற்ற நீதிபதிகள், அவரது தரப்புக்கு வழக்கை வாபஸ் பெற அனுமதி வழங்கினர்.அதே நேரத்தில், உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்ய முடியாது என்றும், இரு தரப்பினரும் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அந்த வழக்கை சட்டப்படி விரிவாக விசாரித்து உயர்நீதிமன்றமே உரிய உத்தரவை பிறப்பிக்கும் என்றும், இதற்கு முன்பு உயர்நீதிமன்ற உத்தரவு மற்றும் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடையும் நீக்கப்படுவதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதன் பின்னர், தொகுதி மாறி அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் தபால் வாக்கை மீட்டு மறு எண்ணிக்கை நடத்த வேண்டும் என தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை பெரியகருப்பன் திரும்பப் பெற்றுள்ளார். தற்போது, சீனிவாச சேதுபதியின் தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி முறையான தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதால், முந்தைய மனுவை வாபஸ் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.