த.வெ.க. அரசின் 100 நாள் சாதனை மலர்: முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டார்
தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தயாரிக்கப்பட்ட **“மக்கள் நலனை இலக்காகக் கொண்ட அரசின் 100 நாள் சாதனை மலர்”** மற்றும் **“ஒரு புதிய தொடக்கம்”** என்ற காலப்பேழை புத்தகத்தை முதல்-அமைச்சர் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.த.வெ.க. அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி, இந்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலப் பணிகள் மற்றும் அரசின் முக்கிய செயல்பாடுகளை தொகுத்து இந்த வெளியீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.“தமிழரசு” சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 100 நாள் சாதனை மலரில், அரசு செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்கள், பல்வேறு துறைகளின் சாதனைகள், முதல்-அமைச்சர் விஜய் மேற்கொண்ட கள ஆய்வுகள், துறை வாரியான ஆய்வுப் பணிகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளில் அவர் ஆற்றிய உரைகளின் தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன. இதனுடன், பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.அதேபோல், “ஒரு புதிய தொடக்கம்” என்ற காலப்பேழை புத்தகத்தில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்ற முக்கிய நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் மற்றும் அவை குறித்த விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழக அரசு செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளும் இந்த புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.2026-ம் ஆண்டு மே 10-ந்தேதி முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் மக்களாட்சியை வழங்கி, தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் அரசு செயல்பட்டு வருவதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மரு.அ.அருண் தம்புராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.