தமிழகத்தில் கள் இறக்க அனுமதி வழங்கப்படுமா? - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு பேருந்து நிலையத்தில் இருந்து ரங்கே கவுண்டன்புதூர் மற்றும் வீரப்பகவுண்டனூர் பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், அந்த பேருந்து சேவையை கேரள எல்லை வரை நீட்டிக்கும் வகையில் புதிய வழித்தடம் தொடங்கப்பட்டுள்ளது.கிணத்துக்கடவு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ், புதிய பேருந்து வழித்தட சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கோவில்கள் அருகில் செயல்பட்டு வந்த 717 மதுக்கடைகள் முதல் கட்டமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதுபோன்ற இடங்களில் உள்ள மேலும் சில கடைகள் குறித்தும் நடவடிக்கை தொடரும் என்றும் அவர் கூறினார்.தமிழகத்தில் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருவது குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கள் இறக்க அனுமதி தொடர்பான கோரிக்கை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அவரது வழிகாட்டுதலின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.