தபால் கட்டணம் வரும் 1 ஆம் தேதி முதல் உயர்வு: எவ்வளவு கூடுகிறது?
இந்திய தபால் துறை, விரைவு தபால் சேவைகளுக்கான திருத்தப்பட்ட கட்டணங்களை அறிவித்துள்ளது. இதனுடன், முதன்முறையாக 'ஆவணம்'மற்றும் 'பார்சல்' எனும் இரு பிரிவுகளுக்கும் தனித்தனி வரையறைகளையும் வெளியிட்டுள்ளது. இந்த புதிய கட்டணங்களும் விதிமுறைகளும் வருகிற ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வர உள்ளன.புதிய நடைமுறையின்படி, மறுவிற்பனை மதிப்பு இல்லாத கடிதங்கள் மற்றும் அச்சிடப்பட்ட ஆவணங்கள் குறைந்த கட்டணத்தில் அனுப்பப்படலாம். வணிகப் பொருட்கள் மற்றும் மறுவிற்பனை செய்யக்கூடியஅனைத்து பொருட்களும் பார்சல் பிரிவில் வகைப்படுத்தப்படும்.
வங்கி பாஸ்புத்தகம், காசோலை புத்தகம், வங்கி கணக்கு அறிக்கை, பான் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் உள்ளிட்டவை ஆவணம் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், 500 கிராம் வரை எடையுள்ள ராக்கி உறைகள், வாழ்த்து அட்டைகள் மற்றும் வணிக மதிப்பு இல்லாத அச்சிடப்பட்ட பொருட்களும் இந்தப் பிரிவின் கீழ் அனுப்பப்படலாம். இவற்றைத் தவிர மற்ற அனைத்து பொருட்களும் பார்சலாகவே கருதப்படும்.பொதுமக்கள் மற்றும் மொத்த வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள '24 விரைவு தபால்'சேவையின் மூலம் அனுப்பப்படும் பொருட்கள் 24 மணி நேரத்திற்குள் வழங்கப்படும்.
அதேபோல், '48 விரைவு தபால்' சேவையில் அனுப்பப்படும் பொருட்கள் 48 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும்.இந்த சேவைகள் தற்போது டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய ஆறு நகரங்களில் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.24 மணி நேர விரைவு தபால் சேவைக்கான பொதுமக்கள் கட்டணம், பொருளின் எடை மற்றும் அனுப்பும் தூரத்தைப் பொறுத்து ரூ.38 முதல் ரூ.186 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 50 கிராமுக்கும் குறைவான பொருளை உள்ளூர் முகவரிக்கு அனுப்ப ரூ.38வும், நாட்டின் பிற பகுதிகளுக்கு அனுப்ப ரூ.94வும் கட்டணமாக வசூலிக்கப்படும்.48 மணி நேர விரைவு தபால் சேவைக்கான பொதுமக்கள் கட்டணம் ரூ.61 முதல் ரூ.121 வரை இருக்கும். மொத்த வாடிக்கையாளர்களுக்கு 24 மணி நேர சேவைக்கான கட்டணம் ரூ.38 முதல் ரூ.100 வரையும், 48 மணி நேர சேவைக்கான கட்டணம் ரூ.48 முதல் ரூ.72 வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.புதிய வகைப்படுத்தல் முறையின் மூலம் ஆவணங்கள் மற்றும் பார்சல்களை தனித்தனியாக பிரித்து, அதற்கேற்ற கட்டணத்தில் அனுப்பும் வசதி ஏற்படும் என்று இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது.