தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றதாகக் கண்டறியப்பட்டுள்ள நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகியும், திமுக பிரமுகருமான அரசகுமார் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் பாய்ந்த நிலையில், அவரது கூட்டாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, அப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் வீடு உள்ளிட்ட அவருடன் தொடர்புடைய 6 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். சென்னை மற்றும் திருச்சியில் நேற்று இந்த சோதனைகள் நடைபெற்றன. கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், தனியார் பள்ளிகளிடம் இருந்து சுமார் ரூ.100 கோடி வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.
Advertisement
இதையடுத்து, அவர் மீது ஊழல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதன்படி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நாளை ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சம்மனை ஏற்று அன்பில் மகேஸ் நாளை விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்தது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பதிவு செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். ரூ.100 கோடி லஞ்சம் தொடர்பான இந்த வழக்கில் சென்னை குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.