டிஜிட்டல் கைது மோசடி: சூரத் அருகே 82 வயது முதியவரிடம் ரூ.2.96 கோடி பறிப்பு
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் பர்டோலி பகுதியைச் சேர்ந்த 82 வயது முதியவர் ஒருவர், ‘டிஜிட்டல் கைது’ எனப்படும் ஆன்லைன் மிரட்டல் மோசடியில் சிக்கி தனது வாழ்நாள் சேமிப்பான ரூ.2.96 கோடியை இழந்துள்ளார். சுமார் 20 நாட்கள் வீட்டிலேயே முடக்கி வைக்கப்பட்டு, தொடர்ந்து அச்சுறுத்தப்பட்ட நிலையில் அவரிடம் இருந்து இந்தப் பணம் பறிக்கப்பட்டுள்ளது.பர்டோலியைச் சேர்ந்த ரமேஷ் சந்திரா (82) என்பவரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு சில நாட்களுக்கு முன்பு மர்ம அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர், தான் தொலைத்தொடர்புத் துறை அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார். ரமேஷ் சந்திராவின் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி பெறப்பட்ட சிம் கார்டு மூலம் சட்டவிரோத விளம்பரங்கள் மற்றும் முறைகேடான பணப் பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளதாகவும், இது தொடர்பாக மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நபர் தெரிவித்தார்.இதையடுத்து கடந்த 8-ந்தேதி, மும்பை சைபர் கிரைம் போலீசார் எனக் கூறிக்கொண்ட மற்றொரு நபர் அவரை வீடியோ காலில் தொடர்பு கொண்டார். முதியவரை நம்ப வைப்பதற்காக மும்பை போலீஸ் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி பெயரில் போலி முத்திரைகள், கையெழுத்துகள் இடம்பெற்ற நீதிமன்ற உத்தரவு நகல்களையும் வாட்ஸ்அப்பில் அனுப்பினர்.அந்த போலி ஆவணங்களில், முதியவரின் வங்கிக் கணக்குகள் வாயிலாக பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றதாகவும், அவரை உடனடியாக கைது செய்வதற்கான பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.மேலும், விசாரணை நிறைவடையும் வரை யாருடனும் பேசக்கூடாது என்றும், வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும் மோசடி கும்பல் உத்தரவிட்டது. 24 மணி நேரமும் வீடியோ காலில் தங்களது கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும், இந்த விவரத்தை யாரிடமாவது தெரிவித்தால் அவருக்கும் குடும்பத்தினருக்கும் கடுமையான சிறைத் தண்டனை கிடைக்கும் என்றும் மிரட்டினர்.இதனால் அச்சமடைந்த ரமேஷ் சந்திரா, சுமார் 20 நாட்கள் தனது அறையிலேயே இருந்துள்ளார்.இதற்கிடையில், கைது நடவடிக்கையைத் தவிர்ப்பதற்கும் வங்கிக் கணக்குகளை சரிபார்ப்பதற்கும் பணத்தை தற்காலிகமாக அரசு கணக்கிற்கு அனுப்ப வேண்டும் என மோசடி கும்பல் கூறியது.