டாஸ்மாக் வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரியின் சகோதரருக்கு லுக் அவுட் நோட்டீஸ்
டாஸ்மாக் நிறுவனத்துக்கான மதுபான கொள்முதல், பார் உரிமம் வழங்குதல் மற்றும் மதுபானங்களை கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து டெண்டர் உள்ளிட்டவற்றில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் செந்தில்பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் எஸ். விசாகன், முன்னாள் அதிகாரிகள் டி. ராமதுரை முருகன், ஆர். பன்னீர்செல்வம், செந்தில்பாலாஜியின் உதவியாளர் பாஸ்கர், ஐ.பி.எஸ். அதிகாரியின் சகோதரர் ரத்தேஷ் ராஜ், சண்முகவேல் மற்றும் எஸ். கார்த்திக் என்ற முலனூர் கார்த்திக் ஆகியோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிகாரப்பூர்வ அனுமதி இல்லாத இடைத்தரகராக ரத்தேஷ் ராஜ் செயல்பட்டதாகவும், மதுபான பிராண்டுகளுக்கு அனுமதி வழங்குதல், பார் உரிமங்களுக்கான டெண்டர் மற்றும் அதிகாரிகள் இடமாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் அவர் செல்வாக்கு செலுத்தியதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலையில், டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வரும் ரத்தேஷ் ராஜுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
தலைமறைவாக உள்ள அவரை கைது செய்து விசாரணை நடத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.ரத்தேஷ் ராஜ் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காகவும், அவர் இந்தியாவுக்கு திரும்பும் பட்சத்தில் கைது செய்வதற்காகவும் இந்த லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.