டிரம்ப் மகன் தலைக்கு ரூ.95 கோடி பரிசு: ஈரான் அரசு ஊடகம் வெளியிட்ட அறிவிப்பால் பரபரப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் 20 வயது மகன் பாரன் டிரம்பை குறிவைத்து ஈரான் அரசு தொலைக்காட்சியில் அதிர்ச்சி தகவல்கள் அடங்கிய வீடியோ ஒளிபரப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் ராணுவத்துடன் தொடர்புடைய ஊடகம் அந்த வீடியோவை வெளியிட்டதாக கூறப்படுகிறது.“பாரனை எங்கு கொல்லலாம்?” என்ற தலைப்பில் வெளியானதாக கூறப்படும் அந்த வீடியோவில், பாரன் டிரம்பின் நடமாட்டங்கள் கண்காணிக்கப்படுவதாகவும், அவரை கொலை செய்பவர்களுக்கு 1 கோடி அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய மதிப்பில் இந்த தொகை சுமார் ரூ.95 கோடி என கூறப்படுகிறது.மேலும், பாரன் டிரம்ப் படிக்கும் பல்கலைக்கழகம், அவரது பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள ரகசிய சேவை அதிகாரிகள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் தொடர்பான காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வீடியோ குறித்து அமெரிக்க ரகசிய சேவை அமைப்புக்கும் தகவல் கிடைத்துள்ளது. பாதுகாப்பில் உள்ள நபர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய தகவல்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக ரகசிய சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கூடுதல் விவரங்களை வெளியிட அவர்கள் மறுத்துள்ளனர்.அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்கனவே மோதல் மற்றும் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், டிரம்பின் குடும்பத்தை குறிவைத்து வெளியாகியுள்ளதாக கூறப்படும் இந்த வீடியோ சர்வதேச அளவில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.