ஜெர்மனியின் முனிச் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரபலமான பீர் மற்றும் நாட்டுப்புற திருவிழா நேற்று பாரம்பரிய உற்சாகத்துடன் தொடங்கியது. முனிச் நகர மேயர் டோமினிக் கிரவுஸ், வழக்கமான பாரம்பரிய முறையில் முதல் பீர் பீப்பாயை திறந்து வைத்து விழாவை தொடங்கி வைத்தார். நேற்று தொடங்கிய இந்த திருவிழா அடுத்த மாதம் 4-ந்தேதி வரை நடைபெற உள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து இந்த ஆண்டு 60 லட்சத்துக்கும் அதிகமான பீர் பிரியர்கள் திருவிழாவில் பங்கேற்பார்கள் என அதிகாரப்பூர்வமாக எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
ஜெர்மனியின் பவேரிய பிராந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நடைபெறும் இந்த விழாவில், ஏராளமானோர் பாரம்பரிய உடைகளான ‘டிர்ன்ட்ல்ஸ்’ மற்றும் ‘லெடர்ஹோசென்’ அணிந்து, இசை மற்றும் நடனத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, ஜெர்மனியின் முன்னணி கால்பந்து கிளப்பான பேயர்ன் முனிச் அணியின் வீரர்களும் பாரம்பரிய உடைகளில் பீர் கோப்பைகளுடன் தங்களது பெண் தோழிகளுடன் விழாவில் பங்கேற்றனர்.