பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களுக்கான சொத்து வரியையும், அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான தொழில் வரியையும் செப்டம்பர் 30, 2026-க்குள் செலுத்த வேண்டும என மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை மாநகராட்சி எல்லைக்குள் செயல்படும் அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998-ன் பிரிவு 117-ன் கீழ், தங்களது பணியாளர்களின் ஊதியத்தில் இருந்து தொழில் வரியைப் பிடித்தம் செய்து மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும். அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொழில் வரியை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் மாநகராட்சிக்கு செலுத்துவது நிறுவனங்களின் சட்டப்பூர்வ கடமையாகும்.
Advertisement
அதேபோல், சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை செப்டம்பர் 30, 2026-க்குள் நிலுவையின்றி செலுத்த வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வரி செலுத்தப்படாவிட்டால், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் விதிகள் 2023-ன் விதி 268 (3)-ன் படி தனி வட்டி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துவோரின் வசதியை கருத்தில் கொண்டு, சொத்து வரி, தொழில் வரி, நிறும வரி மற்றும் வரியில்லா இனங்களுக்கான கட்டணங்களை செலுத்துவதற்காக செப்டம்பர் 19, 20, 26 மற்றும் 27 ஆகிய சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு வசூல் மையங்கள் செயல்படும். அதன்படி, மண்டல அலுவலகங்களிலும், ரிப்பன் கட்டடத்தில் உள்ள வருவாய்த்துறையின் பொது வசூல் மையத்திலும் (Common Collection Centre) மேற்கண்ட நாட்களில் வரி மற்றும் கட்டணங்களை செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.