சென்னை: புதிய டபுள்டெக்கர் பஸ்கள் இயக்கப்பட உள்ள வழித்தடங்களில் ஆய்வு
சென்னையில் மீண்டும் டபுள்டெக்கர் பஸ் சேவையை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, 20 புதிய டபுள்டெக்கர் பஸ்களை இயக்குவதற்கான உத்தேச வழித்தடங்களை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தேர்வு செய்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.1970-களில் சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக டபுள்டெக்கர் பஸ்கள் திகழ்ந்தன. தாம்பரத்தில் இருந்து சென்னை ஐகோர்ட் வரை இயக்கப்பட்ட இந்த பஸ்களில் பயணம் செய்வதற்காகவே சுற்றுலாப் பயணிகள் பலர் சென்னைக்கு வந்ததாக கூறப்படுகிறது. பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தபோதிலும், அதிக பராமரிப்பு செலவு காரணமாக டபுள்டெக்கர் பஸ் சேவை கடந்த 2008-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது.இந்நிலையில், இளம் தலைமுறையினர் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் மாநகர போக்குவரத்துக் கழகம் பல்வேறு நவீன பஸ் சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் டபுள்டெக்கர் பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில் டபுள்டெக்கர் பஸ் சேவையை மீண்டும் கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கான டெண்டரில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஒ.எச்.எம். குளோபல் மற்றும் ஈகிள் கன்ஸ்ட்ரக்ஷன் கோ ஆகிய இரண்டு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்ட பிறகு, 20 டபுள்டெக்கர் பஸ்கள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இந்த பஸ்கள் எந்தெந்த வழித்தடங்களில் இயக்கப்பட வேண்டும் என்பதற்கான ஆய்வும் தற்போது நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக கடற்கரை - கோவளம், கோயம்பேடு - அண்ணாசதுக்கம், சுங்கச்சாவடி - கலங்கரை விளக்கம், பிராட்வே - டி.எம்.எஸ். அல்லது கிண்டி மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக செல்லும் இரண்டு வழித்தடங்கள் என சில வழித்தடங்கள் பரிசீலனையில் உள்ளன.
இவற்றில் இறுதிக்கட்ட ஆய்வு நடத்தி, பொருத்தமான வழித்தடங்கள் உறுதி செய்யப்பட்ட பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.