சிக்கிம் சுரங்க விபத்து: உயிரிழப்பு 8 ஆக உயர்வு; வாயு கசிவால் மீட்புப் பணியில் சிக்கல்
சிக்கிம் மாநிலத்தில் நடைபெற்று வந்த சுரங்க கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.நாம்சி மாவட்டத்தின் ஜொலுங்கே நகரில் உள்ள சமர்டங் பகுதியில் சுரங்கப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், நேற்று மதியம் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சுரங்கத்திற்குள் இருந்த 27 தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டனர்.தகவல் கிடைத்ததும் மாவட்ட ஆட்சியர் அனுபா தம்லிங் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை ஆய்வு செய்தார். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர், சிக்கிம் காவல்துறை, தீயணைப்பு மற்றும் அவசர சேவைப் பிரிவினர், சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.இந்த சம்பவம் குறித்து சிக்கிம் முதல்-மந்திரி பிரேம் சிங் தமங் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, நிலச்சரிவால் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாக தெரிவித்தார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு மீட்புப் பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்ததுடன், தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதியளித்ததாகவும் கூறினார்.இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளதாகவும், அவர்களின் உடல்கள் கேங்டாக் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள மற்ற தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.இதற்கிடையில், சுரங்கத்திற்குள் பரவியுள்ள வாயு காரணமாக மீட்புப் பணிகளில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த வாயுவின் தாக்கத்தால் மீட்புப் பணியில் ஈடுபட்ட சிலருக்கு மயக்கம் மற்றும் சுயநினைவு இழக்கும் நிலை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.நிலச்சரிவின் விளைவாக பூமிக்கடியில் இருந்து இயற்கையாகவே இந்த வாயு வெளியேறியிருக்கலாம் என்றும் அதிகாரிகள் முதற்கட்ட தகவலாக தெரிவித்துள்ளனர்.