நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லாரஸ்டன் பகுதியில் தொழிலாளி மற்றும் விவசாயி என இருவர் அடுத்தடுத்து புலி தாக்கி உயிரிழந்தனர். இதனால் லாரஸ்டன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். மனிதர்களை வேட்டையாடி வரும் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து வன ஊழியர்கள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் இணைந்து புலியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நேற்று புலியை தேடும் பணி 19-வது நாளை எட்டிய நிலையில், வனப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த தானியங்கி கேமராக்களில் பதிவான காட்சிகளை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். ஆனால், அதில் புலியின் நடமாட்டம் பதிவாகவில்லை. அதேநேரத்தில் நவீன டிரோன்கள் மூலம் வான்வழியாக புலி பதுங்கியிருக்கக்கூடிய இடங்களை கண்டறியும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அடர்ந்த புதர்கள் நிறைந்த பகுதிகளில் பல இடங்களில் கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ள போதிலும், புலி தொடர்ந்து சிக்காமல் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது. இதற்கிடையே லாரஸ்டன் அரசு பள்ளி மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் வனத்துறையினர் தீவிர ரோந்து மேற்கொண்டு வருகின்றனர். புலி குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் வாய்ப்பு இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
Advertisement
குறிப்பாக அரசு பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஆயுதங்களுடன் வனத்துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தனியாகச் செல்ல வேண்டாம் என்றும், மாலை நேரங்களில் அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்க்குமாறும் வனத்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். புலியை விரைவாக பிடிக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.இந்த நிலையில், கூடலூர் ஓவேலி பகுதியில் இருவரை கொன்ற புலியை பிடிப்பதற்காக வனத்துறை அமைத்திருந்த கூண்டில் சிறுத்தை ஒன்று சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. புலியை தேடும் பணி 20-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், 13 இடங்களில் வைக்கப்பட்டிருந்த கூண்டுகளில் ஒன்றில் சிக்கிய சிறுத்தையை வனத்துறையினர் மீட்டு, அடர்ந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விடுவித்தனர். புலியை விரைந்து கண்டுபிடித்து பிடிக்கும் நடவடிக்கைகளை வனத்துறையினர் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றனர்.